Thursday, September 25, 2014

அரசியல் - ஒரு நிமிடக்கதை

"மச்சி, நீ கேளேன், இன்னக்கி அந்த க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை கிழிகிழின்னு கிழிச்சி எழுதின என் பேஸ்புக் போஸ்ட்டை , நம்ம அ-ஆ-இ கட்சி மாவட்டம் லைக் போட்டிருந்தாரு ? "
"பார்த்தேன் மச்சி, நேத்து க-கா-கீ பெரியத்தலைவரை பத்தி நீ எழுதினதுக்கும் நம்ம மாவட்டம் கமெண்ட் போட்டிருந்தாரு "
"நான் செம ஹேப்பி, நாளைக்கு கட்சி மீட்டிங் ல பார்க்கலாம்னு நம்ம மாவட்டம் சொல்லிருக்காரு "
மறுநாள், நம் கதையின் நாயகன் உற்சாகமாக கட்சி கூட்டத்தில் க-கா-கீ பெரியத்தலைவரை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட நாயகனின் மாவட்டம் விழுந்து விழுந்து சிரித்தார். உற்சாகமான நம் கதையின் நாயகன் , அடுத்து க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை ஏக வசனத்தில் பேசப்போக, உடனே எழுந்த நம் நாயகனின் மாவட்டம், மைக்கை வாங்கி, அடுத்ததாக வேறொரு தொண்டர் பேசுவார் என அறிவித்தார். நம் நாயகன் சோகமானான். கூட்டம் முடிந்தவுடன் மாவட்டம் , நம் நாயகனிடம் வந்து
"தம்பி, இன்டர்நெட் வேற, நிஜம் வேற. க - கா - கீ மாவட்டத்தலைவர் என் மச்சான். என்னோட பிசினஸ் பார்ட்னர் வேற ,, நீ அந்த பெரியதலைவரை என்ன வேணுமினாலும் பேசிக்கோ, லோக்கல் மீட்டிங்ல லோக்கல் ஆட்களை திட்டக்கூடாது, அதுவும் சொந்தக்காரன்னா கூடவே கூடாது , என்ன புரிஞ்சுதா ? "
"புரிஞ்சுது சார் "
அரசியலை புரிந்து கொண்ட நம் கதையின் நாயகன், மறுநாள் கட்சியை எல்லாம் மறந்து 'நான் டியூன் ஆயிட்டேன்னு " சினிமாக்காரங்களை கலாய்த்து ஸ்டேடஸ் போட ஆரம்பித்தான்.