Showing posts with label கலைஞர் மு. கருணாநிதி. Show all posts
Showing posts with label கலைஞர் மு. கருணாநிதி. Show all posts

Monday, June 02, 2014

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் - பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, எழுத்தாளர் கருணாநிதி இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதலமைச்சர் கருணாநிதி, அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் பொற்காலமான 1996-2001 ஐந்தாண்டுகள் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர் கலைஞரை மிகவும் பிடிக்கும். வடிகட்டிய சுயநலவாதியான எனக்கு ஒருவரைப் பிடிக்கவேண்டுமெனில் நான் ஓர் ஆதாயமாவது அவரிடம் இருந்து அடைந்திருக்க வேண்டும். நான் அடைந்திருக்கின்றேன்.
1996 வரை ஒவ்வொரு பொறியியற் கல்லூரிகளுக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்பி இருந்த நிலையை மாற்றி, ஒற்றைச் சாளர முறையை அறிமுகப் படுத்தியப் பின்னர் நேரடியாகப் பயன் அடைந்தவன் நான்.
அதற்கு முன்னர், ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 100 ரூபாய் விண்ணப்பப் படிவத்திற்கான செலவு என்று வைத்துக் கொண்டால் கூட, பத்துக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்ப ரூபாய் 1000 ஆகும். ஏழ்மைக்கும் நடுத்தரத்திற்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு அன்று ஆயிரம் ரூபாய்கள் என்பது மிகப்பெருந்தொகை.
ஆனால் கலைஞர் ஆட்சியில், ஒரே விண்ணப்பம், ஒற்றைச் சாளர முறையில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொதுவாக என்ற முறை வந்த பின்னர் நேரடியாக மிகவும் பயனடைந்தது நடுத்தர ஏழை மாணவர்கள். . அதுவரை சமூக நீதி இடஒதுக்கீடுகளில் 'உட்டாலக்கடி' செய்து கொண்டிருந்த கல்லூரிகளும் வழிக்குக் கொண்டு வரப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிக் கொண்டிருக்கின்றது.
ஒருவேளை, ஒற்றைச் சாளரமுறை இல்லாமல் இருந்திருந்தால் நான் பொறியியல் படிப்பு படிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்பொழுது இருக்கும் நிலையை அடைந்திருப்பேனா எனச் சொல்ல முடியாது. ஒருவேளை அடைந்திருக்கலாம், ஆனால் அந்தப் பாதை இன்னும் கடுமையானதாக இருந்திருக்கும். அரசாங்கத்தின் ஒரு சிறியத்திட்டம், ஒரு தலைமுறை இளைஞர்களின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் வளமையாக்கி இருக்கின்றது.
என்னைப்போல, இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பயணப்படும் வாழ்க்கைப் பாதையை வசதியாக்கிக் கொடுத்தமைக்காகவே முன்னாள் முதலமைச்சர் கலைஞரை போகுமிடமெல்லாம் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.
இன்னும் ஓராண்டில் சமர்ப்பிக்கப்போகும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சிப் படிப்பிற்கான எனது ஆராய்ச்சி நூலை கலைஞருக்கு சமர்ப்பிப்பதே அவருக்கு நான் செய்யப்போகும் என்னால் முடிந்த மிகப்பெரும் நன்றி காணிக்கை.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்