Sunday, May 30, 2010
Sunday, May 23, 2010
டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம்(Øresundsbron)
ஒருவொருக்கொருவர் புரிந்துகொள்ள கூடிய மொழிகளையும் கலாச்சாரத் தொடர்புகளையும் காலங்காலமாக கொண்டிருந்தாலும் வெறும் 16 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட நீரிணைப்பு இரண்டு நாடுகளை ஏனோ நூற்றாண்டுகளாக தள்ளியே வைத்திருந்தது. இதனை மாற்றிய பெருமை மனிதனின் பொறியியற் அறிவுக்குச் சவால் விடப்பட்டு கட்டப்பட்ட ஒர்சன் பாலத்தையேச் சாரும்.


பாலத்தை தாங்கி கம்பீரமாக நிற்கும் நான்கு தூண்களின் அடித்தளம் நிலத்தில் உருவாக்கப்பட்டு, மறுமுனையில் சுரங்கங்கள் கடலினுள் இறக்கப்பட்டதுபோல, இறக்கப்பட்டன. பின்பு நடுக்கடலில் 204 மீட்டர்கள் உயரத்தில் கட்டப்பட்டு, இரண்டடுக்கு பாலங்கள் பகுதி பகுதியாக கொண்டுவரப்பட்டு இணைக்கப்பட்டன. அதாவது 12 மீட்டர்கள் மடங்கின் உயரத்தில் வரும் இரும்புக் கம்பிகளுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன.


ஆகஸ்ட் 14 , 1999 அன்று கடைசிப் பாலத்துண்டு பொருத்தியவுடன் முதன்முறையாக டென்மார்க்கும் சுவீடனும் இணைக்கப்பட்டது. நடுப்பாலத்தில் சுவீடனின் இளவரசி விக்டோரியாவும் டென்மார்க் இளவரசர் பிரட்ரிக்கும் சந்தித்துக் கொண்டபொழுது நூற்றாண்டுகால ஸ்காண்டிநேவியக் கனவு நிறைவேறியது.

சிறிய சிறிய தடைக் கற்களான ரயில் சமிஞைகள், மின்னழுத்த, மின்னோட்ட தரக்காட்டுப்பாடு சிக்கல்கள் மென்பொருள்கள் உதவியுடன் களையப்பட்டன. திட்டமிட்டக் காலத்தில், திட்டமிட்டதற்கு மேலாக செலவு ஆகாமல் குறித்தக் காலத்தில் மக்களுக்கு பயன்பாட்டிற்குத் திறந்த்துவிடப்பட்டது.
2000 ஆம் ஆண்டுக் கணக்குப்படி 30 பில்லியன் டேனிஷ் குரோனர்கள் செலவிடப்பட்டத் தொகையைத் திரும்பப் பெற பாலத்தைக் கடக்க கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகமான கட்டணத்தினால் பயன்பாடு குறைவாக இருந்தபோதிலும், டேனிஷ்காரர்கள் மால்மோ சுற்றுப்புறங்களில் வீடு, நிலங்களை வாங்கிக் குடியேறி, தினமும் கோபன்ஹேகனிற்கு தினமும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டதாலும் ,டென்மார்க்கில் இருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சுவிடீஷ் மக்களை அங்கு நகர்த்த ஆரம்பித்துள்ளதாலும் இந்தப் பாலத்தின் பயன்பாடு எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 2035 ஆண்டில் செலவிடப்பட்டத் தொகை திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரமாரிப்புகளுக்காக ரயில் அடுக்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளில் பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் செல்ல வழிவகுக்கப்பட்டிருக்கிறது. வாகனப்போக்குவரத்தையும் பாலத்தின் பாதுகாப்பையும் கண்காணிக்க அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன்(256 கேமராக்கள்) கட்டுப்பாட்டு மையமும் உண்டு.
பாலம் வந்தால் எல்லாம் நாசமாய் போகும் எனக் கதறிய சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களுக்கு நல்ல செய்தியாக பாலம் அமையப்பட்டிருக்கும் 51 தூண்களும் அதில் உருவாகும் பாசிகளும், கடற்புற்களும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிர்பாராத புகலிடமாக அமைந்த்துவிட்டன. இயற்கை சிலப்பல சமயங்களில் மனித சமுதாயத்திற்கு தேவையான முன் முயற்சிகளுக்கு ஏற்றாற்போல தன்னையும் தகவமைத்துக்கொள்ளும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மிளகுத்தீவில் மனிதநடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.மனித முயற்சிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான தாவரங்கள் இதுவரை உருவாகி இருப்பதாக தாவரவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் தங்குமிடமாகவும் இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருகில் சுவீடனின் முனையில் இருக்கும் ஃபோல்ஸ்டர்ப்ரோ ஒரு பறவைகளின் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தின் மிகப்பெரும் நீருக்கடியில் இருக்கும் கான்க்ரீட் சுரங்கம், நீளமான இரண்டடுக்கு போக்குவரத்துப்பாலம் , உயரமான கோபுரங்களைக் கொண்ட பாலம் ஆகிய பெருமைகளைக் கொண்ட இந்த இணைப்பு இரண்டு நாடுகளையோ மட்டும் இணைக்கவில்லை, ஒட்டுமொத்த ஐரோப்பாவை மேலும் நெருக்கமாக்கியது என்பது மிகையில்லை.
இந்த பத்தாண்டுகளில் டென்மார்க்கின் ஜிலாந்து, சுவீடனின் ஸ்கோனே மாநிலங்கள் இணைந்து ஒர்ரெசன் என்ற பலம் வாய்ந்த பொருளாதர நிலப்பரப்பாக அமைய காரணமான இந்த கம்பீரமான பாலம் நமக்கு சொல்லாமல் சொல்வது ஏராளம். நூறு வருடங்களுக்கு முன் சாத்தியமில்லை என ஒத்திப்போடப்பட்ட விசயம் இன்று விசுவரூபமாய் நம் முன் நிற்கிறது. குறுகிய நோக்கங்களுடன் உப்பிச்சப்பில்லாத காரணங்களுக்காக , தொலைநோக்குத் திட்டங்களை கிடப்பில் போடப்படாமல் செயற்படுத்தடும்பொழுது அடையும் பயன்களை பறைசாற்றும் நிகழ்கால சாட்சியாக இந்தப் பாலம் இருக்கிறது. இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது கீழ்கண்ட வரைபடம் உங்களின் நினைவுக்கு வராமல் இருக்காது.

இதே தொலைவு,இதே போல ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டாலும் தனித்தன்மை வாய்ந்த இனங்கள், ம்ம் பார்க்கலாம். பலசமயங்களில் வரலாறுகள் திருத்தி எழுதப்படுகின்றன. மீன் கொடியும் புலிக்கொடியும் பாலத்தின் மையத்தில் பறக்கும் காட்சியை ,நம் வாழ்நாளின் இறுதிப்பகுதிகளிலாவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என நம்புவோம்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:27 AM
18
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அரசியல், நிகழ்வுகள்
Tuesday, May 18, 2010
Do not say yes when you have to say no - சிறுகதை
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
6:15 AM
13
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்
Friday, May 14, 2010
சுயதம்பட்டம் - ஆனந்தி மே மாத இதழ் - சிகரங்களின் சிகரம் சச்சின் டெண்டுல்கர்
கணினியில் உட்கார்ந்து ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் தமிழில் எழுதினாலும் கைகளில் குழந்தையைப்போல தவழும் அச்சு ஊடகங்களில் நாம் எழுதியதை வாசிக்கையில் வரும் மனநிறைவுக்கு ஈடு ஏதுமில்லை.டெஸ்ட் ஆட்டம்போல பக்கம் பக்கமாக கூட எழுதிவிடலாம், இருபதுக்கு இருபது ஆட்டம்போல அச்சு ஊடகத்திற்காக வார்த்தைகளை கட்டுக்குள் வைத்து எழுதுவது சிரமமாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட்டின் இமயமான சச்சின் டெண்டுல்கரைப் பற்றி எழுதிக் கொடுக்கும் படி 4தமிழ்மீடியாவின் ஆனந்தி சஞ்சிகைக் குழுமம் கேட்டபின், மட்டைபந்தாட்டத்தின் மாவீரனை அரைப்பக்கத்திற்குள் சுருக்கி எழுதியது இந்த மே மாத ஆனந்தி இதழில் வெளிவந்துள்ளது.
ஆனந்தி சஞ்சிகையைப் பற்றி நான் எழுதி அனுப்பி இருந்த சில வார்த்தைகளும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. 
என்னுடைய நேரிடையான படைப்புகள் இதுவரை எதுவும் வெகுசன அச்சு ஊடகங்களில் வெளிவராவிடினும் புதியதலைமுறையின் சுவீடன் கட்டுரையைத் தொடர்ந்து, ஆனந்தியிலும் என் எழுத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
ஆனந்தி மே மாத இதழை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:19 AM
6
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், ஆனந்தி சஞ்சிகை, விளையாட்டு
Thursday, May 13, 2010
நடு இரவில் - திரைப்படக் கண்ணோட்டம்
தமிழில் சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் வந்தத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் சிறப்பான சிலத் திரைப்படங்கள் ஜெய்சங்கரோ ரவிச்சந்திரனோ நடித்து 60 களிலேயே வந்துவிட்டன. அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான் 'நடு இரவில்'.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:27 PM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள், திரைப்படம்
Tuesday, May 11, 2010
கடவுள் வருகிறார் - சிறுகதை
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:58 PM
17
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அரசியல், சிறுகதைகள்
சுவீடன் மேற்படிப்புக்காக வங்கிக் கடன் கோரும்பொழுது தேவையான கோப்பு
சுவீடனில் மேற்படிப்புக்கு அனுமதி கிடைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நிறைய மாணவர்கள் புதிய தலைமுறையில் நான் எழுதிய சுவீடன் மேற்படிப்புக் கட்டுரையையும் இந்த வலைமனையில் எழுதப்பட்டிருந்தப் பதிவையும் வாசித்து விண்ணப்பித்தவர்கள் என அறியும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. கட்டுரையைப் படித்த பின்னரும் ஆலோசனை மையங்களை அணுகி தண்டமாகச் செலவு செய்து அனுமதிக் கிடைத்தவர்களுக்கும் வாழ்த்துகள். அனுமதிக் கிடைத்தச் சிலர் கல்விக் கடனுக்காக வங்கிகளை அணுகி இருப்பீர்கள். அவர்கள் வழக்கம்போல இந்தப் பல்கலைகழகம்/கல்லூரி உண்மையானது என எப்படி நம்புவது, அங்கீகரிக்கப்பட்டதா என கேள்விகளைக் கேட்டுத் துளைத்திருப்பார்கள்.அவர்களின் கேள்விகளிலும் நியாயம் இருக்கின்றது. இணையதளங்களைக் குறிப்பிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இத்தகைய சூழலில் சுவீடனில் மேற்படிப்பு படிக்க அனுமதி கிடைத்தவர்கள் உணர்ச்சிவசப்படாமல், வங்கிகளில் கல்விக் கடன் கோரும்பொழுது கீழ்கண்ட கோப்பை தரவிறக்கம் செய்து தாளில் அச்சிட்டுக் கொள்ளவும். இந்தக் கோப்பில் சுவீடன் மேற்படிப்புப் பற்றிய சட்டத் திட்டங்களும்,கல்லூரிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் தரவு வங்கி அதிகாரிகளுக்குப் போதுமானதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்.
கோப்புக் கிடைக்கும் சுவீடன் அரசாங்கத்தின் தளம் http://www.sweden.gov.se/sb/d/7868/a/21541
முழுக்கோப்பும் இங்கே http://www.sweden.gov.se/content/1/c6/02/15/41/92fc8fff.pdf
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:57 AM
2
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: கல்விக்கடன், நிகழ்வுகள்
Tuesday, May 04, 2010
கால்கமார்க்கன் - சிறுகதை
எதிரில் இருக்கும் பெண்ணை கண்ணாலேயே காமுற்றுக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் பெண் "உனக்கு பேய்கள் மேல் நம்பிக்கை இருக்கின்றதா?" எனக் கேட்டால் எப்படி இருக்கும்.இதோ அவள் அழகில் சில வினாடிகள் முன் வரை புல்லரித்துப் போய் இருந்த நான், தற்பொழுது பயத்தில் மயிர் கூச்செறிய எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.
அவள் சுவிடீஷில் கேட்டது புரிந்தாலும் ஒரு முறை உறுதி படுத்திக் கொள்ள "வாட் டிட் யு ஸே" என்றேன்.
"இந்த உலகத்தில் பேய்கள் இருக்கின்றது என நம்புகின்றாயா" என மறுபடியும் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.
இவள் அரபிஸ்காவா , செர்பிஸ்காவா அல்லது தலைமுடியைக் கருப்பாக்கி இருக்கும் ஸ்வென்ஸ்க் மங்கையா என யோசித்துக் கொண்டே கண்களால் அவளைக் கட்டவிழ்ப்பு செய்து கொண்டிருந்ததை ஒரு வேளை கண்டுபிடித்து விட்டதனால்தான் இப்படி கேட்கிறாளோ. இவளைச் சரிகட்டிவிட்டால் அம்முவை எப்படிக் கழட்டி விடலாம் எனும் அளவிற்குச் சென்ற எண்ண ஓட்டத்திற்கு இவளின் இந்தக் கேள்வி அணைபோட்டது.
"சிறுவயதில் நம்பி இருக்கின்றேன், ஆனால் இப்பொழுது இல்லை, பேய்களை விட உன்னைப்போன்ற அழகான பெண்களிடம் தான் அதிகம் பயம் இருக்கின்றது" பேய் பயத்திலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு என்னுடைய முதல் கடலை விதையை தூவினேன்.
"நான் விளையாட்டிற்குக் கேட்கவில்லை, அந்த தானியங்கி கதவுகளைப் பார்த்தாயா !! தானாகவே திறந்து மூடுகின்றன, எனக்கு என்னமோ நம்மிருவரைத் தவிர இந்த அறையில் வேறு யாரோ ஒருவரும் உள்ளது போல தோன்றுகிறது" என்றாள் நிதானமான சுவிடீஷில்.
அவள் சொல்லுவதற்கு முன்னமே அந்த தானியங்கிக் கதவுகள் யாரும் உள்ளே வராமல் தானாகவே திறந்து மூடுவதைக் கவனித்திருந்தேன். காற்று அதிகம் இருப்பதனால் பறந்து வரும் இலைகள் அகச்சிவப்புக் கதிர் ஓட்டத்தை தடைப்படுத்துவதால் தானாகவேத் திறந்து மூடிக் கொண்டிருக்கின்றன என்ற எனது அறிவியல் அறிவு எப்பொழுதோ விளக்கி விட்டிருந்தது. எனது கடலையை அடுத்த நிலைக்குத் தள்ள ஒரு வாய்ப்பு கொடுத்த அவளின் பேய்க் கேள்விக்கு மானசீகமாக நன்றிச் சொல்லிவிட்டு , ஒரு இலையை எடுத்து நுழைவு வாயிலின் கதவின் முன் காட்டி அவளுக்கு நிறுபித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளின் தோளோடு தோளாக இருமுறை வேண்டுமென்ற உரசியும் பார்த்தேன். கோதுமை மாவு கணக்காய் வழுவழுவென இருந்தாள்.
நள்ளிரவு 12 மணிக்கு கார்ல்ஸ்க்ரோனாவிற்கான கடைசி ரயிலைப் பிடிக்கத்தான் இவளும் காத்திருக்கின்றாள் என்பது புரிந்தது. நானும் அதே ரயிலுக்காகத்தான் காத்திருக்கின்றேன். அம்மு குடிப்போய் இருக்கும் புதிய வீட்டில் தனியாக இருக்க பயமாக இருப்பதனால் கிளம்பி வரச்சொல்லி இருந்தாள். மணிரத்னம் படங்களில் வருவதைப்போல இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொள்வாள், கன்னத்தில் சில சமயங்களில் முத்தம் கொடுப்பாள், சில சமயங்களில் கன்னத்தைக் கடித்துக் கூட வைத்து விடுவாள். ஆனால் அதற்கு மேல் நான் இறங்க முயற்சித்தால் உனக்காக என் அப்பாவின் நம்பிக்கையை குலைக்க முடியாது என அழுகையுடன் சண்டை ஆரம்பிக்கும். கட்டிப்பிடித்தல் கண்ணத்தைக் கடித்தல் அப்பாவின் நம்பிக்கையை குலைப்பது ஆகாதா எனக் கேட்டால் கிடைப்பதுக் கூட கிடைக்காமல் போய்விடும் என்பதனால் தருவதைத் தரட்டும் எனவிட்டுவிடுவதுண்டு.
அவள் இருக்கும் தெருவின் பெயர் கால்கமார்க்கன்,கால்க என்ற சுவிடீஷ் சொல்லின் அர்த்தம் தூக்கில் இடுவது என்பதாகும்.சென்ற நூற்றாண்டில் அங்கு இருக்கும் தெருவில் தான் குற்றவாளிகளைத் தூக்கில் இடுவார்களாம். இதைச் சொன்னதால் தான் அம்முவுக்கு பயம்.
ஏற்கனவே வயதானவர்களின் அழு குரல்கள் கேட்பது போல இருக்கு அவளின் பயத்தோடு இதுவும் சேர்ந்து அவளின் பயத்தை இரு மடங்காக்கியது.வயதானவர்கள் கத்துவதுபோல இருப்பதற்கான காரணமும் எனக்குத் தெரியும். அம்மு இருக்கும் கால்கமார்க்கன் தெருவிற்கு
பின் சில அடிகள் தொலைவில் பால்டிக் கடல். பனிக்காலம் முடிந்து விட்டதால் கடலில் நீள் உறக்கத்தில் இருந்த சீல்கள் வெளியே வந்து தனது துணைகளை அழைக்க இப்படி கூச்சலிடும். அது நோய்வய்யப்பட்டவர்கள் கொஞ்சம் சத்தமாக முன்குவதைப்போல இருக்கும். ஆனால்
இதைச் சொல்லவில்லை. சொல்லாமல் கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு, வந்தால் உதட்டில் முத்தம் கொடுப்பதாக அவள் உறுதி அளித்ததானால் சடுதியில் கிளம்பி இங்கு வந்தால் இப்படியான அதிர்ச்சி கலந்த இன்பமான திருப்பம். அங்கு பழம் என்றால் இங்கு பழத்தோட்டமே காத்திருக்கின்றதே!!
12 மணியாக இன்னும் 15 நிமிடங்களும், அதன் ரயில் பயணம் 15 நிமிடங்களும் இருப்பதனால் இவளிடம் எப்படியும் மின்னஞ்சல் வாங்கிவிடலாம் என மனதில் திட்டமிட்டுக் கொண்டே இந்த முறை அவளின் எதிரில் உட்காரமல் வலப்பக்கமாக நெருக்கமாகவே அமர்ந்து கொண்டேன். அளவான செய்ற்கை நறுமணத்துடன், பெண்ணின் வியர்வை வாசமும் கலந்து அடிக்கும் வாசனைதான் அவர்களின் அழகை மெருகூட்டுவதே !! அம்முவின் வாசத்தை விட இவளின் வாசம் உணர்ச்சிவசப்பட வைப்பதற்கான வீச்சு அதிகமாக இருந்தது.
ரயில் வரும் வரையில் நடந்த உரையாடல்களில் நான் தெரிந்து கொண்டவை, அவள் போலாந்து நாட்டைச் சேர்ந்தவள், அவளின் தாத்தா வீடு ரோன்னிபேயின் புறநகர்ப்பகுதிகளில் இருக்கின்றது, அவளின் தாத்தா இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார். வீடு அரசாங்கத்தின் பரமாரிப்பில் இருக்கின்றது. அம்முவின் வீட்டிற்குச் செல்ல நான் இறங்கப்போகும் ரயில் நிறுத்தமான பெரிஓஸா நிலையத்தில் தான் அவளும் இறங்கப்போகிறாள். ரயிலில் ஏறியபின்னரும் அவளின் அருகில் இருக்கும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டேன்.
"நதியும் குன்றும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இடம் என பெரிஓஸா வைப் பொருள் கொள்ளலாம்" என சுவிடீஷ் புலமையைக் காட்டி அசத்தலாம் என்ற பொழுது,
"தெரியும், குன்றும் நதியும் மட்டும் அல்ல, நானும் எனது நண்பர்களும் அங்கு தான் பேசிக்கொள்வோம்" எனச் சொல்லிச் சிரித்தாள். ரயில் பரிசோதகர் வர,அடுத்தப் பெட்டியில் அவளின் நண்பர்கள் இருப்பதாகச் சொல்லி சென்று விட்டாள். பயணச்சீட்டு எடுக்காமல் இருந்திருக்கலாம். பரிசோதகர் என் முன் அவளிடம் கேட்டால் அவளுக்கு அவமானமாக இருக்கும் சென்றிருப்பாள் என நினைத்துக் கொண்டேன்.
தோட்டத்தின் பழங்கள் தன் வசப்படாவிட்டால் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என , கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என அம்முவை நினைத்தபடியே அடுத்த சில நிமிடங்கள் ஓட, நான் இறங்கும் நிறுத்தம் வந்ததும் , குறைந்த பட்சம் போய் வருகிறேன் என்று சொல்லி விடைபெற அந்த போலாந்துப் பெண்ணைத் தேடினேன். அவளைத் தேடி முடிப்பதற்குள் ரயில் நிறுத்த நடைமேடையில் அம்மு நின்றுகொண்டிருப்பதை பார்த்து விட்டு விடுவிடுவென இறங்கி
"நீ ஏன் ஸ்டேஷனுக்கு வந்த"
"ரொம்ப பயமா இருந்துச்சு, அதுதான் உன்னை ரிசீவ் பண்ண இங்கேயே வந்துட்டேன்"
இந்த ரயில் நிறுத்தத்திற்கும் கால்கமார்க்கன் தெருவிற்கும் 10 நிமிட நடைதான்.
"அந்த அழுவுற வாய்ஸ் சீல்கள் தன்னோடா பார்ட்னர்ஸைக் கூப்பிட கொடுக்கிற சிக்னல்டா அம்மு"
"தெரியும் கூகிள்ல கண்டுபிடிச்சேன், நம்ம ஊருல காக்கா முன்னோர்கள்னு சொல்ற மாதிரி, இங்கே சீல்கள் இறந்து போன ஆன்செஸ்டர்ஸாம்"
அம்முவின் வீடு இருக்கும் குடியிருப்பின் முனையை அடையும் பொழுது,
"கேம்பஸ் பின்னாடி இருக்கிற கடல் மேட்டுல வச்சி உனக்கு கிஸ் கொடுக்கவா" முகத்தை பவ்வியமாக வைத்தபடியேக் கேட்டாள்.
முழுநிலவு, கடல்காற்று, இதற்குமேலும் ரம்மியமான சூழல் கிடைக்காது என கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் கடல்பகுதிக்கு அம்முவை அழைத்துச் சென்றேன். குவிந்த அம்முவின் உதட்டின் அருகே மெதுவாக என் உதடுகளைக் கொண்டுச் சென்றபொழுது என்னை விலக்கிவிட்டு,
"நம்ம இரண்டு பேரைத்தவிர வேற யாரோ இங்க இருக்கிற மாதிரி இருக்குடா"
அந்தப்போலாந்து பெண் சொன்னதைப்போலவே அம்முவும் சொல்ல, பயம் மனதில் மெதுவாக கவ்வ ஆரம்பித்தது.
"இந்தக் கடல்ல சீல்களைத் தவிர வேற யார் இருக்கப்போறாங்க" என மீண்டும் அம்முவை முத்தமிட எத்தணித்தேன். காமம் பயத்தை ஓட வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அணைக்கப்பட்ட முதுகு எண்ணைய் பசையில் இருக்கும் சப்பாத்தி மாவு போல இருக்க, போலாந்துப் பெண்ணின் மணம் என் நாசிகளில் மெதுவாக ஏற ஆரம்பித்தது. இறந்தவர்கள் சீல்களாக மறுபிறப்பு எடுப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி படித்தது மின்னலென வந்து மறையவும், எனது உடலும் பிசுபிசுப்பாக சீலாக மாறவும் சரியாக இருந்தது. அந்த பெரிஓஸா கடற்பகுதி முழுவதும் சீல்களின் கூட்டங்கள் ஓலமிட ஆரம்பிக்க,"இதோ கேம்பஸ் வரை போயிட்டு வரேன்னு" சொன்னவனை இன்னமும் காணவில்லையே என அம்மு கலக்கத்துடன் கால்கமார்க்கன் வீட்டில் தூங்க ஆரம்பித்தாள்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:12 AM
11
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், சிறுகதைகள்
Saturday, May 01, 2010
ஸுஸு - Zozo - அரபி/சுவிடீஷ் மொழிப் படம் - திரைப்பார்வை
போரின் கொடுமைகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கும் படங்களின் வன்முறைக்காகவே குழந்தைகளின் உடன் அமர்ந்து பார்க்க இயலாது. ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக போரின் தாக்கத்தையும் புலம் பெயர்ந்த இடத்தில் ஏற்படும் சில மனத்தாங்கல்களையும் ஒரு சிறுவனின் பார்வையில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ஸுஸு. தொன்னூறு சதவீதம் அரபியிலும் பத்து சதவீதம் சுவிடீஷ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை உள்நாட்டுப்போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த லெபனான் நாட்டில், எண்பதுகளின் இறுதியில் இருந்து துவங்குகிறது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
9:50 AM
4
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்படம், நிகழ்வுகள்












