I am Single, தனித்து இருக்கின்றேன் அவளின்
நினைவுகளோடு.

'It is easy to understand why a person is bad – the reasons are obvious. But it is very difficult to understand why a person is good. There seems to be no reason at all for being good. Good simply is' --- She was Good to me


Sunday, July 27, 2008

மறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை

சில சமயங்களில் காயத்தின் வலியுடனேயே இருப்பது சுகமாகவே இருக்கும். காயங்களை விட அவை மறைந்து அதன் அடையாள வடுக்கள் அதிகமான வலி தரும். அப்படி வலி தரும் மகிழ்ச்சியில் ஜெனியின் நினைவுகளுடன் கடைசி நான்கு வருடங்களாக இருந்த என்னை மீட்டெடுத்து வந்தவள் இந்த ரம்யா. இதோ என் முன்னால் என்னை ரசித்தபடி அமர்ந்து இருக்கிறாள்.

“கார்த்தி, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு என்ன பேரு வைக்கலாம்?”

“அர்ஜுன்,அஞ்சலி” இந்தக் கேள்வி எனக்கு ஏற்கனவே பரிச்சயமான கேள்வியாக இருந்ததால் சட்டென பதில் வந்து விழுந்தது.

“வாவ், சூப்பர் செலக்‌ஷன், இங்கிலிஷ்லேயும் பர்ஸ்ட் எழுத்து, தமிழிலும் பர்ஸ்ட் எழுத்துல ஆரம்பிக்கிற நேம்ஸ் குட் குட்” சிறிது நேர மௌனத்திற்குப்பின் ரம்யாவே தொடர்ந்தாள்

“கார்த்தி, நீ ஜெனி கூட போன எல்லா இடங்களுக்கும் என்னை கூட்டிட்டுப்போ ”

இதோ இந்த உணவகம் கூட நானும் ஜெனியும் நான்கு வருடங்களுக்கு முன்பு அடிக்கடி வரும் இடம்தான். உணவக வேலையாட்களின் முகம் சிலவை பழக்கமானவையாக இருந்தன. சிலர் சினேகமாக சிரித்தனர். என்னையும் ஜெனியையும் ஞாபகம் வைத்திருக்கின்றார்களோ என்னவோ.

“சரி ரம்யா, நாளைக்கு மாயாஜால் போகலாம்”

கடைசியாக மாயாஜாலில் நான், ஜெனியுடன் பார்த்தபடம் வர்ணஜாலம். அதன்பின்னர் அந்த திரையரங்கத்திற்கு போகும் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் தவிர்த்து வந்து இருக்கிறேன். இனி தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் விருப்பம் இல்லை.

மறுநாள் , திருவான்மியூருக்குப்பின் தான் காரை ஓட்டிவருவதாக கூறியதால் நான் இடது புறம் வந்தமர்ந்து கொள்ள வழிநெடுக மனம் பின்னோக்கிய நினைவுளுடன் உடல் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. ஷீரடி சாய்பாபா கோவில், பசீரா ,
பெப்பிள்ஸ் கடற்கரை செல்லும் தார்ச்சாலை இவையனைத்து நானும் ஜெனியும் பழகியநாட்களை என்னைப்போலவே நினைவில் வைத்திருக்கும்.

“என்ன கார்த்தி, சைலண்டா வர்ற, மலரும் நினைவுகளா, போதும் போதும், மாயாஜாலே வந்துடுச்சு”

ஒரு விசயத்தை விட்டு நாம் முழுமையாக விலகி வந்துவிட்டோம் நினைக்கின்றபொழுது அந்த விசயம் நம் முன்னால் வந்து நின்று நம்மை நிலை குலைய வைக்கும். சுப்ரமணியபுரம் படம் இடைவேளையில் கண்கள் இரண்டால் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே , நானும் ரம்யாவும் பாப்கார்னும் காபியும் வாங்க காத்திருக்கையில்

“ஹாய் கார்த்தி” என ஒரு குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன். ஜெனி கையில் ஒரு குழந்தையுடனும் அவள் காலைக்கட்டிக்கொண்டிருந்த குழந்தையுடனும் நின்று கொண்டிருந்தாள்.

“எப்படிடா இருக்கே? நாலுவருசம் இருக்கும்லே, என்னோட கல்யாணத்தப்ப பார்த்தது” ஜெனி என்னை “டா” வென விளித்தது எனக்கு சங்கடமாக இருந்தபோதும் சமாளித்துக்கொண்டே

“ நீங்க எப்படி இருக்கீங்க, இது உங்க குழந்தைகளா?”

காலைக்கட்டிக்கொண்டிருந்த சின்னப்பையனைக் காட்டி “ஆமாம், இது அர்ஜுன்” . கையில் வைத்திருந்த குழந்தையை சுட்டி. “இந்தக் குட்டி பேரு அஞ்சலி”

“உங்க ஹஸ்பெண்ட் எங்கே?”

“அவரு, புரஜெக்ட் விசயமா ஆஸ்திரேலியா போயிருக்காரு, இன் - லாஸோட தசாவதாரம் வந்தேன், ரொம்ப நாள் கழிச்சு உன்னைப்பார்த்தது ரொம்ப சந்தோசம்டா கார்த்தி, இந்த என்னோட கார்ட், வீ கீப் இன் டச்”

அவளது அலுவலக முகவரி,தொலைபேசி,கைபேசி எண் அடங்கிய அந்த அட்டையைக் கொடுத்துவிட்டு அஞ்சலிப்பாப்பாவை கொஞ்சியபடியே கமல்ஹாசன் உலகைக்காப்பாற்றுவாரா என படத்தின் அடுத்தப் பாதியை பார்க்க அவளது திரையரங்கத்திற்குள் நுழைந்தாள்.

அதுவரை ஜெனியுடன் ஆன உரையாடலில் வராத ரம்யா என் கையில் இருந்த அந்த அட்டையை வாங்கி

“ம்ம் நல்ல பொசிஷன்ல தான் இருக்கா.. குட் குட், சரி வா படம் போட்டுறுவான் .”

சுப்ரமணியபுரம் படத்தின் தாக்கம் அன்றிரவு தணிந்த போது, ஜெனி கொடுத்த முகவரி அட்டையை ரம்யா திருப்பியேக் கொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஜெனியின் அலுவலக பெயரை மனதில் கொண்டு வர முயற்சிக்கையில்

“கண்கள் இரண்டால்” கைபேசியில் பாடி ரம்யாவின் அழைப்பு வந்தது

“கார்த்தி, நம்ம குழந்தைகளுக்கு நல்ல தமிழ் இலக்கியப் பெயர் வைக்கலாம், அர்ஜுன் , அஞ்சலி பேரு எல்லாம் வேண்டாம்”

“சரி, ரம்யா” என்றேன் ஞாபகத்திற்கு வந்த ஜெனியின் அலுவலகப்பெயரை மறந்தபடியே

----------முடிவு------